Friday, April 1, 2011

திணிக்கப்படும் பசி

ல்லா நகரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயர்வகையான உணவு விடுதிகளில் நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு உணவருந்துவதின் அடிப்படை ஒருபோதும் பசி என்பதாக இருப்பதில்லை. உயர்வகை உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களின் தட்டுகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் மிஞ்சி வெளியில் கொட்டப்படும் உணவு கிட்டத்தட்ட முப்பது சதவிகிதத்திற்கும் மேலே.

நான்கு பேர் சேர்ந்து நடுத்தர நகரங்களில் உள்ள உயர்வகை உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டாலே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் கட்டணம் வருகிறது. அதில் சராசரியாக முப்பது சதவிகிதம் உணவு மீதியாக தட்டிலேயே வீணடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுவது பற்றி பெரிதாக கவலையேதுமில்லை. தினமுமா சாப்பிடறோம், எப்போதாவதுதானே என்ற மேம்போக்குத் தனத்தால் இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை.

உயர்வகை உணவு விடுதிகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது. நம் தேசத்தில் இன்னும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே அரிது.

மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர். பொருளை விற்பவர்களுக்கு இரண்டு பேருடைய தேவையும் புரியும் போது, இரண்டு பேருமே கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்ற எளிய அரசியலில் விலையை உயர்த்த முயல்கின்றனர். என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.

உதாரணத்திற்கு இருபது ரூபாய் இருக்கும் பொருளை வாங்க ஒருவனிடம் பத்து ரூபாய்தான் இருக்கிறது, இன்னொருவனிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது. பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான்.

மூன்று ரூபாய்க்குள் கிடைக்கும் முட்டை, வெங்காயம் சேர்த்து வறுக்கும்போது சில உணவகங்களில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது, அடுத்த வீதியில் இருபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இருபது ரூபாய்க்கும் வாங்கும் திறனுள்ளவர்கள் நிச்சயம் பசியின் அடிப்படையில் அந்த முட்டையை வாங்குவதில்லை. அப்படி வாங்குபவர்கள் நிச்சயம் அதை முழுதாக உண்ண வேண்டிய கட்டாயமில்லை. எனெவே ஒரு பகுதி மீதம் வைக்கப்பட்டு குப்பைக்குப் போகிறது.

அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது. இதே போல்தான் தண்ணீரும், உணவும் சிறிதும் மனசாட்சியில்லாமல் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது.
தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்...
தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.

அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.

குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!




More Info :http://www.erodekathir.com
 

No comments:

Post a Comment